தி.மு.க. அரசை கண்டித்தும், அதற்கு துணையாக இருந்த ஆதரவு தொழிற்சங்கங்களை கண்டித்தும் தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் வேலாயுதம் வரவேற்றார். மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், சம்பத்குமார் எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, கிருஷ்ணகிரி மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சியின் அண்ணா தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் கோவிந்தராஜ் கலந்துகொண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஊதிய உயர்வு, சலுகைகளை உடனே வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு அதிக அளவு பணிச்சுமையை ஏற்படுத்தக் கூடாது. டிரைவர்ளை தொடர்ந்து பஸ்களை இயக்க வற்புறுத்தக் கூடாது. என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற் கூட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. தொழிற்சங்க பேரவைத் துணைத் தலைவர் விஜய் வெங்கடேஷ், பாட்டாளி தொழிற்சங்க மண்டல பொதுச் செயலாளர் ராஜா, நல்லம்பள்ளி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சிவப்பிரகாசம், டாக்டர் அசோகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொருளாளர் முனிரத்தினம் நன்றி கூறினார்.



