கன்னியாகுமரி பிப் 23
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடும், தமிழர்களும் எப்போதும் வடமொழிக்கும் வடவர் ஆதிக்கத்திற்கும் எதிரானவர்கள் தான்.
இந்த எதிர்ப்பு மனநிலை என்பது ஒரு நீண்டகால வரலாற்றின் தொடர்ச்சியாக இப்போதும் நம்மிடம் கடத்தப்பட்டிருக்கிறது. தாய் மொழியை உயிராய் நேசித்து பாதுகாத்து வளர்ப்பது என்பது தமிழர்களின் மரபிலே ஊறிய ஒன்று. அந்த தமிழுணர்வை பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த திராவிட ஆட்சியாளர்கள் இன்னும் தங்களை தமிழ் அரசியல் தளத்தில் நிலைநிறுத்திக்கொள்ள எடுக்கும் ஆயுதமாகவும் அந்த தமிழ் உணர்வு தான் இருக்கிறது.
வழக்கம்போல திமுக தனது இந்தி எதிர்ப்பு அரசியலை தற்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறது.
ஒன்றிய கல்வித் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டால்தான் கல்வி வளர்ச்சிக்கான ஒன்றிய அரசு நிதியை விடுவிக்க முடியும் என்ற கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமான ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அது மிகவும் கண்டிக்கத்தக்கது .
ஒன்றிய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கிற்கும், ஒன்றிய அமைச்சரின் அதிகார திமிர் மிகுந்த இந்த கருத்திற்கும் முக்கிய காரணமே, ஒரு மாநிலத்திற்கு மிக முக்கியமான துறையான கல்வித்துறையை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதுதான்.
இத்தகைய ஒரு கருத்து ஒன்றிய அரசிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது பற்றிய விவாதங்களை உருவாக்கி இருக்கலாம், மற்ற மாநிலங்களுக்கும் இவ்விவாதங்கள் ஒரு முன்னுதாரணமாகவும் தூண்டுதலாகவும் இருந்திருக்க கூடும்.
ஆனால் அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். அதற்கு காரணம் நீட் முதற்கொண்டு புதிய கல்வி கொள்கை வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமான , கல்வியில் மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு நடந்தது திமுக கூட்டணியுடன் நடந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தான். குறைந்தபட்சம் தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையையாவது முற்று முழுதாக எதிர்க்கிறதா என்றால் அதிலும் அவர்களது இரட்டை வேடம் வெளிப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என மேடைகளில் முழங்கி விட்டு அறிக்கைகளை எழுதி விட்டு புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு திட்டங்களையும் அம்சங்களையும் வெவ்வேறு பெயர்களில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் திணித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.
சனாதன கருத்துக்களை தமிழ்நாட்டின் பாட நூல்களில் சேர்ப்பது, இந்துத்துவ கருத்துக்களை பரப்புபவர்களை கொண்டு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுப்பது. மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சியில் இந்துத்துவ கருத்தாளர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவது என புதிய கல்விக் கொள்கையின் அனைத்து திட்டங்களும் தமிழ்நாடு அரசால் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையெல்லாம் மறைப்பதற்காக இந்த புதிய கல்விக் கொள்கை பிரச்சனையை வெறும் மும்மொழி கொள்கை பிரச்சினையாக சுருக்கி, இந்தி எதிர்ப்பு அரசியலை செய்து மக்களை மடை மாற்றிக்கொண்டிருக்கிறது திமுக அரசு.
தமிழ்நாடு எப்போதும் தாய் மொழியை விட்டுக் கொடுத்ததில்லை. வேறு மொழிகள் படிக்க விரும்புபவர்களை தடுப்பதும் இல்லை. இந்த திராவிட மாடல் அரசுக்கு உண்மையிலேயே தமிழ் மீது அக்கறை இருந்தால், தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழை கட்டாய பாடமாக்குங்கள்.
உண்மையிலேயே அரசு பள்ளி மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், இன்னும் நிரப்பப்படாமல் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புங்கள். தமிழ் மொழி மீது அத்தனை அக்கறை கொண்ட அரசு பல அரசு பள்ளிகளில் தமிழாசிரியர்களை கூட இன்னும் நியமிக்காமல் இருக்கும் காரணம் என்னவோ?
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துங்கள். அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்துங்கள். குறைந்தபட்சம் அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள், காற்றோட்டமான வகுப்பறைகள், பாதுகாப்பான பள்ளி வளாகம் எனும் அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி செய்யுங்கள் .
அதை விட்டுவிட்டு எம் மாணவர்களை உங்கள் அரசியல் சமரசங்களுக்கு பலி கொடுத்துவிட்டு, இது போன்ற விவாதங்கள் எழும் போதும், தேர்தல் நேரங்களின் போதும் மட்டும், எங்களை காக்க வந்த மீட்பர்கள் போல இரட்டை வேடமிட்டு நாடகம் ஆடாதீர்கள்.
தமிழ்நாடு மக்களே… இவர்களின் இந்தி எதிர்ப்பு வெறும் கபட நாடகம் என்பதை புரிந்து கொள்வோம். இந்தியோ இந்தியமோ நம் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அதை எப்படி உடைத்தெறிவது என்பது நமக்குத் தெரியும். நம் முன்னோரின் எதிர்ப்புணர்வும் போராட்ட குணமும் அதை நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.
நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வியை மீட்டெடுக்க நாம் இப்போது பேச வேண்டியது மாநில தன்னுரிமையை, நாம் விவாதிக்க வேண்டியது மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு அபகரிக்கப்பட்ட நம் கல்வி உரிமையை திரும்ப மீட்பது பற்றி.
அதை இந்த திராவிட மாடல் ஆட்சியாளர்கள் செய்ய மாட்டார்கள். ஏனெனில் இந்த உரிமைகளை பறிகொடுத்ததே அவர்கள் தான்.
ஆனால் தமிழ் தேசிய அரசியல் களத்தில் பயணிக்கும் இளம் தலைமுறையினர் இதை சரியாக உள்வாங்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். இவர்களின் இரட்டை முகத்தை எம் மக்கள் முன்பு அம்பலப்படுத்துவோம்.
உத்திர பிரதேசத்தோடும் பீகாரோடும் ஒப்பீடு செய்து தமிழ்நாட்டு பிள்ளைகளின் கல்வி தரத்தை நிர்ணயிக்கும் உங்கள் திராவிட மாடல் போல் அல்ல. கல்வியில் உலகின் தலைசிறந்த நாடுகளை மிஞ்சும் வகையிலான கனவுகளுடன் காத்திருக்கிறோம். ஒரு நாள் அதிகாரம் எங்கள் கைகளுக்கு வரும்போது நீங்கள் பறிகொடுத்த உரிமைகளை நாங்கள் மீட்டெடுப்போம். எங்கள் பிள்ளைகளுக்கான கல்வியை உலகத்தரத்துடன் நாங்கள் கட்டமைப்போம்.இவ்வாறு. அதில் கூறப்பட்டுள்ளது.