ராமநாதபுரம், பிப். 23-
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையேற்று சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சீதனம் பொருட்கள் வழங்கி பேசுகையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் பெண் பணியாளர்கள் அதிக அளவில் இருந்து வருகிறார்கள். அதற்குக் காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கும் திட்டங்களின் பயன்களே ஆகும்.
பெண்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் பயனுள்ள திட்டமாக இருந்து வருகிறது. வறுமையில் உள்ள குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் உயர்கல்வி பெற புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் வழங்கப்பட்டு வருவதுடன் தற்போது காலை உணவு திட்டத்தால் எண்ணற்ற குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.
வறுமையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் வளைகாப்பு விழா என்பது எட்டாக் கனியாக இருந்து வருவதை எண்ணி அவர்களுக்கும் அரசு சார்பில் வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒரு தாய் தன் குழந்தைக்கு எந்த வகையான சீர்வரிசை பொருள் கொடுப்பார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு சீதனப் பொருட்கள் வழங்கி அவர்களின் மனநிலை சந்தோசமாக இருந்திட வேண்டும் என்பதே இந்த விழாவில் சிறப்பாகும்.
பொதுவாக கர்ப்பிணி பெண்களின் இந்த காலம் அவர்களின் ஒவ்வொரு சிந்தனையும் நிகழ்வுகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த குழந்தை முழு வளர்ச்சியுடன் போதிய அளவு எடையுடன் வளரும். அதை கருத்தில் கொண்டு வறுமையில் உள்ள கற்பிணி பெண்களுக்கு சத்தான உணவுகளையும் இது போன்ற விழாக்களையும் நடத்தி அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த வளைகாப்பு விழா நடைபெற்று வருகிறது.
நடப்பாண்டி முதுகுளத்தூர் ஒன்றியத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இதே போல் மற்ற ஒன்றியங்களிலும் நடைபெறும். இது மட்டும் இன்றி மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களை துவக்கி வருவதுடன் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பான திட்டங்களை வழங்கி சிறந்த முதல்வராக நம்முடைய தமிழக முதலமைச்சர் திகழ்ந்து வருவது மட்டுமின்றி பெண்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவராகவும் தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து கற்பிணி பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் மாலை அணிவித்து புது புடவை வளையல் மஞ்சள் குங்குமம் முக்கனிகள் உள்ளிட்ட தொகுப்பு பொருட்கள் மற்றும் ஐந்து வகையான சாதங்களை அமைச்சர் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைத்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாவதி, முதுகுளத்தூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சசிகலா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.