கருப்பேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை – 3 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் உண்டியல் பணம் திருட்டு – திருடிய நகை பணத்துடன் கோவிலிலேயே படுத்துறங்கி அதிகாலை எழுந்து சென்ற திருடன்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த வாலிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கருப்பேரி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. கருப்பேரி கிராமத்தில் சுமார் 30 வீடுகள் ஓரிடத்தில் அமைந்திருந்தாலும், மற்ற அனைவரும் அவரவர் விவசாய நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமத்தின் மையப்பகுதியில் மாரியம்மன் கோவில் அமையப்பெற்றுள்ளது. மிகப்பெரிய ஆழமரத்தடியில் அமையப்பெற்றுள்ள இக்கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் உண்டியல் பணம் பிரிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உண்டியல் பணம் பிரிக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள், அம்மன் கலுத்தில் இருந்த தங்க தாலி உட்பட உண்டியல் பணம் சுமார் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளான். முன்னதாக கோவிலுக்கு வந்த கொள்ளையன் பயபக்தியுடன் செருப்பை வெளியே கழற்றிவிட்டு உள்ளே சென்று பொருட்களை திருடிக்கொண்டு, தான் கொண்டு வந்திருந்த துண்டை கோவிலின் வாசலில் விரித்து அங்கேயே படுத்து உறங்கியுள்ளான். பின்னர் அதிகாலை எழுந்து பையுடன் அங்கிருந்து சென்றுள்ளான். சென்றபோது தான் அணிந்து வந்திருந்த செருப்பு மற்றும் துண்டை மறந்து அங்கேயே வைத்துவிட்டு காலை பூஜைக்கு வந்த பூசாரி பூட்டு உடைப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்த ஊர் கவுண்டர்கள் மாணிக்கவாசகம் மற்றும் ராஜப்பன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். வாலிப்பட்டி ஊராட்சியில் அடிக்கடி திருட்டு நடந்து வருவதை மத்தூர் காவல் துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.



