கன்னியாகுமரி ஜூன் 10
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காணவும், கடலில்படகு பயணம் செய்யவும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர், வெளி மாநிலம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ளவர்கள் என ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து திருவள்ளுவர் சிலையை காண்பதற்கு படகு மூலம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. எனவே தமிழக அரசு சார்பில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு கடலில் நடந்து செல்லும் விதமாக கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதன் பணி முடிவு பெற்று வருவதால் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவு பாறையையும் இணைப்பதற்கான கடல்சார் பாதசாரிகள் பாலம், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு செய்திக்குறிப்பு:தமிழகத்தில் சாலை வசதிகளை பெருக்குவதில், முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில் 4,984 கோடி ரூபாய் மதிப்பில், 577 கி.மீ., நீள சாலைகளை, நான்குவழிச் சாலைகளாக அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.இதுவரை, 2,608 கோடி ரூபாய் செலவில், 215 கி.மீ., நீள சாலைகள், நான்குவழிச் சாலைகளாக மேம்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன; மற்ற பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், 2,465 கோடி ரூபாயில், 1,710 கி.மீ., சாலைகளை, இருவழிச் சாலைகளாக மாற்றும் பணி எடுக்கப்பட்டது. இதுவரை, 1,860 கோடி ரூபாயில், 1,407 கி.மீ., சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.கடந்த மூன்று ஆண்டுகளில், 109 புறவழிச்சாலை பணிகள் எடுக்கப்பட்டு, 18 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. 21 பணிகள் நடந்து வருகின்றன. 27 பணிகள் நில எடுப்பு நிலையிலும், 38 பணிகள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையிலும் உள்ளன.குமரி முனையில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம், 37 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது. இப்பணி விரைவில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.