நாகர்கோவில் மார்ச் 12
குமரி மாவட்டம் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழாவின் பத்தாவது நாள் திருவிழாவான நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மாசி மாதத்தில் மாசி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி திருவிழா ஆனது கடந்த மார்ச் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம் தொடங்கியது முதல் அம்மனுக்கு காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவிழா முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். அது மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்து ஏராளமான பெண்கள் இருமுடி கட்டி தலையில் சுமந்தவாறு விரதம் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.இதையடுத்து விரதமிருந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்துவழிபட்டனர். இந்த நிலையில் மாசி கொடை விழாவின் பத்தாவது நாள் திருவிழாவான நேற்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோயிலில் அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.பக்தர்களின் வசதிக்காக அன்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்து வசதியும் செய்யப்பட்டன.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்வதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.திருவிழா முன்னிட்டு கோயில் வளாகத்தில் இந்து சமயம் மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வலிய படுக்கை பூஜை இரவு 12 மணி அளவில் அம்மனுக்கு நடைபெறயுள்ளது.