கடலூர் மாவட்டத்தில் பா.ம.க நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்தும், வன்னியர் சங்க தலைவர் தலையை வெட்டுவோம் என கூறிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி தென்காசியில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாமக நிர்வாகி செல்லத்துரை என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இளைஞர்களால் தாக்கப்பட்டார். அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி அங்கு சென்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 4 – ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழியின் தலையை வெட்டி விடுவோம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையினை இழிவுப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன், தென்காசி சட்டமன்றத் தொகுதி செயலாளர் சேது அரிகரன், மாவட்ட தலைவர்கள் குலாம், சுரேஷ் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, தென்காசி சட்டமன்றத் தொகுதி தலைவர் சுசி.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர்கள் அய்யம்பெருமாள் பிள்ளை, திருமலைக்குமாரசாமி யாதவ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கடலூர் மாவட்ட பா.ம.க நிர்வாகி செல்லத்துரை தாக்கப்பட்டதை கண்டித்தும், மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழியின் தலையை வெட்டி விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தை நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிர்புறம் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டும், கடையத்தை தலைமையிடமாக கொண்டு தனித்தாலுகா அறிவிக்க வேண்டும், தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த வேண்டும், பாவூர்சத்திரம் தொடர்வண்டி மேம்பால பணிகளை விரைந்து முடித்திட கோரியும், அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும், தென்காசியில் அரசு கலைக்கல்லூரி அமைத்திட கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி சட்டமன்றத் தொகுதி செயலாளர்கள் தங்கராஜ், பால்நேரு (எ)கண்ணன், ராஜேந்திரன், தொகுதி தலைவர் கிருஷ்ணன், மகளிர் அணி தொகுதி செயலாளர் குருவம்மாள், தங்கமுத்து, சரஸ்வதி தொகுதி மகளிர் அணி தலைவர் அய்யம்மாள், சரஸ்வதி, மாவட்டத் துணைத் தலைவர் மகாதேவன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கெய்சர் அலி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் திருமலைக்குமார், நகர செயலாளர்கள் சங்கரநாராயணன், செண்பகக்குமார், பக்கீர் மைதீன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, சுரேஷ், சண்முகசுந்தரம், ஒன்றிய தலைவர்கள் தண்டபானி, இசக்கிமுத்து, வன்னியர் சங்க தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.