கிருஷ்ணகிரி, நவம்பர் 22 –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் பணி நிமித்தமாக பர்கூர் சென்றார். அப்போது அவர் செல்லும் வழியில் BRG மாதே பள்ளி எனும் இடத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சின்ன காரகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் உயிருக்கு போராடி வந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் தனது வாகனத்தை நிறுத்தி விபத்தில் சிக்கிய ராமச்சந்திரனுக்கு தண்ணீர் வழங்கி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் காயம் அடைந்த நபருக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவ கல்லூரி முதல்வருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தார்.



