சேட்டன் மார்களின் சேட்டை : கேரள தெரு நாய்களை குமரியில் இறக்கி விட்டு அபராதம் கட்டிய பரிதாபம்.
மார்த்தாண்டம் மார்ச் 21
கேரளாவில் இருந்து ஏற்றிவரப்பட்ட 20 தெருநாய்கள், தமிழ்நாடு எல்லையில் கட்டச்சல் பகுதியில் இறக்கிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சோதனைச்சாவடியில் அதிகாரிகள் கேட்டபோது தடுப்பூசி போட நாய்களை அழைத்துச் சென்றதாக கூறியது தெரியவந்துள்ளது.
நாய்களை இறக்கிவிட்ட வாகனத்தை பொதுமக்கள் பிடித்து களியல் காவல்துறையில் ஒப்படைத்தனர்.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் டெம்போ டிராவலர் வாகனத்தில் வந்தவர்கள், கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நாய்களை அவிழ்த்துவிட்டுள்ளனர்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், கேரள பதிவெண் கொண்ட அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். மேலும், அவர்களை வைத்தே அவிழ்த்துவிடப்பட்ட நாய்களை பிடித்து மீண்டும் வாகனத்திற்குள் அடைத்தனர். தகவல் அறிந்து சென்ற கடையாலுமூடு காவல் நிலையத்தினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் வீதிகளில் சுற்றித் திரிந்த தெருநாய்களை பிடித்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி எல்லையில் கொண்டு வந்து இறக்கிவிட்ட கும்பல் வசமாக சிக்கியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விசாரணையில், கேரளாவின் திருவனந்தபுரம் தெருக்களில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் பிடிக்கப்பட்டிருக்கின்றன;இவற்றை திருவனந்தபுரம் புறநகரில் கொண்டு வந்து இறக்கிவிடாமல் அங்கிருந்து நேராக கன்னியாகுமரி கட்டச்சல் பகுதிக்கு கொண்டு வந்து ஒவ்வொரு பகுதியாக தெருநாய்களை இறக்கி விட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலமானது தமிழ்நாட்டை குப்பைக் கிடங்காகவே கருதும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கேரளாவின் மருத்துவ கழிவுகள், கோழி- மீன் இறைச்சி கழிவுகளை லாரி லாரியாக ஏற்றி வந்து தமிழ்நாட்டு எல்லை கிராமங்களில் கொட்டி விட்டு தப்பி ஓடுவது கேரளா லாரி ஓட்டுநர்களின் வாடிக்கையாக இருந்தது.
தமிழ்நாட்டை தொடர்ந்து குப்பை கிடங்காக கேரளா மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயமும் நேரடியாக தலையிட்டு, கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் தலைமையில் மீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்ல உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் உயிருடன் தெரு நாய்கள் இறக்கி விட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.