சுசீந்திரம், டிச. 2 –
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத்திருநாளில் சுவாமி ஊர்வலம் மற்றும் சொக்கப்பனை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல நாளை கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலை 7.30 மணி அளவில் தாணு மாலய சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும் திருவேங்கட விண்ணவப்பெருமாள் கருட வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் முருகர் மயில் வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகே வடக்கு பகுதியில் பனை மரத்தை நட்டு வைத்து பனை ஓலைகளால் வேயப்பட்ட சொக்கப்பனை தீவைத்துக் கொழித்தி சொக்கப்பனை திருவிழா நடைபெறுகிறது. அதுபோல தேரூர் எடுத்த ஆயுதமுடைய சிவபெருமான் கோவில், கருப்புக்கோட்டை மகாதேவர் கோவில், கோதை கிராமம் சிவபெருமான் கோவில் உட்பட்ட கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.



