கன்னியாகுமரி, நவ. 20 –
தமிழக கடலோர பகுதியில் உள்ள மாவட்டங்களில் கடல் வழியாக படகு மூலம் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் கடலில் படகு மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார் இந்திய கடலோர காவல் படை இந்திய கடற்படை மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து இன்று தமிழகத்தின் கடலோர பகுதியில் “சாகர்கவாச் ஆபரேஷன்” என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினார்கள். கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீசார் 4 அதிநவீன ரோந்து படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் அவர்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி நாளை (வெள்ளிக் கிழமை) மாலை 6 மணி வரை 2 நாட்கள் நடக்கிறது. இதில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ஈடுபட்டனர். இது தவிர இந்திய கடலோர காவல் படையினரும் இதில் ஈடுபட்டு உள்ளனர். சின்ன முட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் கடல் பகுதி வரை ஒரு குழுவினர் அதிநவீன ரோந்து படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல இன்னொரு குழுவினர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து குளச்சல் கடல் பகுதி வரைக்கும் அதிநவீன படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதுபோல் சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த பாதுகாப்பு ஒத்திகையில் கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் என ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



