கன்னியாகுமரி, நவம்பர் 17 –
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சபரி மலை ஐயப்ப சீசன் இன்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகை தருகின்றனர். கன்னியாகுரிக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் சூரிய உதயம் பார்த்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர்.
இதற்காக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக கடலில் மிதவைகள் விடுவது வழக்கம். தற்போது கன்னியாகுமரி நகராட்சி சார்பில் முக்கடல் சங்கமத்தில் மிதவை விடப்பட்டுள்ளது. இதனால் புனித நீராடும் பக்தர்கள் கடலின் ஆழ பகுதிக்கு செல்லாமல் கரையிலேயே புனித நீராடி செல்வதற்கு வசதியாக உள்ளது. கடலில் புனித நீராடும் பக்தர்கள் மிதவையைத் தாண்டி செல்லக்கூடாது.



