நாகர்கோவில், டிச. 13 –
கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ என்.தளவாய் சுந்தரம் முயற்சியின் பலனாக, குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்பினர்.
நாகர்கோவில் அரசு ரப்பர் கழகத்தில் பால்வெட்டும் பணியை தனியாருக்கு வழங்கப்பட்டது. இதனால் இங்கு பணியாற்றும் 81 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 15 தற்காலிக பணியாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் 8 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ என்.தளவாய் சுந்தரம் சென்னையில் இது தொடர்பாக வனத்துறை மற்றும் அரசு ரப்பர் கழக உயர் அதிகாரிகளை சந்தித்து கொண்டு பேசினார். இதன் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை மூலம் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து நகர்கோவிலில் தொழிலாளர் நல துறை அலுவலர் ஶ்ரீதர் முன்னிலையில் முக்கிய பேச்சுவார்த்தை நேற்று (12 ம் தேதி) நாகர்கோவிலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தொழிலாளர் பிரதிநிதிகள் பங்கேற்று, முக்கிய பிரச்சினைகளை விளக்கினர். அனைத்து தரப்பினரும் விவாதித்த நிலையில், தனியாருக்கு வழங்கப்பட்ட பால் வெட்டும் அனுமதி ரத்து செய்யப்பட்டு நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் மூலம் பால்வெட்டும் பணி நடைபெறும் என உறுதி அளிக்கப்பட்டது. கோரிக்கைகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டது.
வேலைநிறுத்தம் செய்த 8 நாட்களுக்கு மாற்று பணி வழங்குவது தொடர்பான இறுதி முடிவுக்கான பேச்சுவார்த்தைகள் தொடருகின்றன. ரப்பர் தொழிலாளர்களின் நலனுக்காக முன்னெடுத்த இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து தொழிலாளர்கள் எம்.எல்.ஏ தளவாய் சுந்தரத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.


