மார்த்தாண்டம், ஆக. 11 –
குமரி மேற்கு மாவட்ட அதிமுக பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேருராட்சி பூத் நிர்வாகிகள் பட்டியல் ஆய்வு செய்யும் பணி பொன்மனையில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சக்கீர் உசேன், ஒன்றிய செயலாளர் நிமால், பொன்மனை பேரூர் செயலாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சின்னத்துரை கலந்து கொண்டு பூத் நிர்வாகிகளின் பட்டியலை ஆய்வு செய்து பூத் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: 2026 ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும். கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பார். திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை. தென்மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களில் படுகொலைகள் அதிகம் நடைபெற்று வருகிறது. அங்கன்வாடி மற்றும் சத்துணவு துறை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய ஏற்பாடு செய்வேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
சென்னை மாநாகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மினி அம்மா மருந்தகத்தின் பெயரை மாற்றி தற்போது நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டம் என்று நடத்தி கொண்டு இருக்கிறிர்கள். அதிமுக ஆட்சியில் தான் மத்திய அரசு அனுமதியுடன் தமிழகத்திற்க்கு 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தது. இதனால் அதிக மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் 1000 ருபாய் கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திர்கள். ஆனால் ஆட்சி அமைத்தவுடன் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்று அறிவித்தார்கள்.
தற்போது தேர்தல் வர இருப்பதால் அனைத்து மகளிருக்கு ரூபாய் 1000 கொடுக்கபடும் என்று அறிவித்து மகளிரை ஏமாற்ற பார்க்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் மினி அம்மா மருந்தகம் தொடங்கபடும். தினமும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் போன்றவைகள் தான் அதிகம் நடைபெறுகிறது என பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மனோ, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்கள் குமார், செந்தமிழ்வாசன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சுமன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயதாஸ், பேரூர் செயலாளர்கள் ஜெஸ்டின்ராஜ், விஜுகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பிரதீப்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் அண்ணா, மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



