நாகர்கோவில், ஜன. 9 –
தேசிய சாலைப்பாதுகாப்பு மாத விழாவையொட்டி ஜனவரி 1 முதல் 31 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் மாவட்ட வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சுரேஷ் பாபு தலைமை வகித்தார். ஆய்வாளர்கள் கலைசெல்வி, சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி வேப்பமூடு சந்திப்பில் நிறைவடைந்தது.
பின்னர் ஊர்வலத்தை தொடங்கி வைத்து எஸ்பி ஸ்டாலின் பேசியதாவது: சாலை பாதுகாப்பு என்பது காவல்துறை அல்லது போக்குவரத்து துறையின் மட்டும் பொறுப்பு அல்ல; பொதுமக்கள் அனைவரும் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றார். இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், அதிவேகம், செல்போன் பயன்படுத்தி வாகனம் ஓட்டுதல், மது போதையில் ஓட்டுதல் போன்ற காரணங்களால் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 60,900 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 18,500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் அதிவேக ஓட்டத்தினால் ஏற்பட்டவை என்றும், ஒரு உயிரிழப்பு ஒரு குடும்பத்தின் முழு வாழ்வையும் பாதிக்கிறது என்றும் அவர் உணர்ச்சிபூர்வமாக எடுத்துரைத்தார்.
“காவல்துறையை பார்த்தால் மட்டுமே ஹெல்மெட் அணியாதீர்கள். உங்கள் பாதுகாப்பிற்காக தினமும் கட்டாயம் அணியுங்கள். நீங்கள் பாதுகாப்பாக ஓட்டினால் உங்கள் பிள்ளைகளும், சமூதாயமும் அதை பின்பற்றும்” என அவர் வலியுறுத்தினார்.
பேரணியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மாணவர்கள், போக்குவரத்து பணியாளர்கள், வாகன விற்பனையாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, “சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு” என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அனைவரும் சாலை விதிகளை கடைப்பிடித்து, தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக வாகனம் ஓட்டி விபத்துகளை தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.



