நாகர்கோவில், நவ. 18 –
ஆரல்வாய்மொழி பகுதியில் பொய்கை அணை உள்ளது. இந்த அணையின் மேட்டு கால்வாய் மூலம் 8 குளங்களும், பள்ளக்கால்வாய் மூலம் 8 குளங்களும் என
16 குளங்கள் மற்றும் நேரடி பாசனம் என மொத்தம் 383.74.5 ஹெக்டேர் (947.85 ஏக்கர்) பரப்பளவு ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர் சுற்றுவட்டார பகுதிகள் பாசன வசதி பெறுகிறது.
இந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவ மழையில் அணைக்கு ஓரளவிற்கு தண்ணீர் வந்து, 36 அடி கொள்ளளவை எட்டியது. அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி.
இந்நிலையில், பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு 18/ 11 /2025 முதல் 03/12/2025 வரை 16 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இன்று (செவ்வாய்கிழமை) காலை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ, கோதையாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அருள்சன் பிரைட் , பொய்கை அணை தலைவர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாசனத்துறை மாவட்ட குழு உறுப்பினர்கள் தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, அருள், உதவி செயற்பொறியாளர் வல்சன்போஸ், உதவி பொறியாளர் அஜிஸ், நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் செண்பகசேகரபிள்ளை, ஜெனில்சிங், விவசாய பிரதிநிதிகள் விஜி, ரவி, பிரபு, ஜெகதீஷ், டோனிபெலிக்ஸ், வடிவேல்பிள்ளை, தாசன், தோவாளை பஞ்சாயத்து யூனியன் முன்னாள் சேர்மன் பூதலிங்கம்பிள்ளை, வள்ளியூர் பஞ்சாயத்து யூனியன் முன்னாள் சேர்மன் பாஸ்கர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



