இரணியல், நவ. 3 –
இரணியல் சந்திப்பு அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தனியார் நடத்தும் பார் இயங்கி வந்தது. பார் செயல்படுவதை தடைசெய்ய வேண்டி மதுரை உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டது. நாம் தமிழர் போராட்டத்திற்கு பின்பு மதுக்கடை பார் மூடப்பட்டது. இதனிடையே மதுக்கடையை மூட வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்தது. இது சம்பந்தமாக ஏற்கனவே 2 முறை போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு நாம் தமிழர் கட்சி முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தது. இதனால் டாஸ்மாக் கடை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 12 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கடை திறக்கப்பட்டது. வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தது. இதனிடையே போலீசார் பாதுகாப்புக்காக இரணியல் ஜங்ஷன் பகுதியில் குவிந்தனர். அப்போது ஜங்ஷன் பகுதியில் போலீசார் வைக்கப்பட்டிருப்பதை கண்டு மாற்று வழியாக தும்பவிளை அம்மன் கோவில் சாலை வழியாக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் டாஸ்மாக் முன்பு குவிந்தனர்.
பின் டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் பாதுகாப்புக்காக பணிக்காக வைக்கபட்டிருந்த பேரிகாடுகளை தூக்கி நடுரோட்டில் வீசி டாஸ்மாக் கடையை அடைத்து பூட்டினர். இதனால் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் சிறுது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின் அனைவரும் டாஸ்மாக் கடையின் முன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு தமிழக அரசை கண்டித்தும், மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். தொடர்ந்து டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டம் மாநில மகளிர் பாசறை செயலாளர் ஆன்ஷி சோபா ராணி தலைமையில் நடைபெற்றது.
மாநில மகளிர் அணி பாசறை செயலாளர் மரிய ஜெனிஃபர், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், மண்டல செயலாளர் ரூபன் பெஞ்சமின், நடுவன் தொகுதி தலைவர் பெலிக்ஸ், கொள்கை பரப்புச் செயலாளர் சீலன், மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், விளவன் கோடு மகளிர் பாசறை செயலாளர் மேரி ஸ்டெல்லா உட்பட
நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்து காவல் மற்றும் மினி பேருந்துகளில் ஏற்றி நெய்யூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். ஆண்கள் 106, பெண்கள் 33 உட்பட 139 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.



