கன்னியாகுமரி, டிச. 8 –
கன்னியாகுமரி தொகுதி நாம் தமிழர் கட்சி துணைத்தலைவர் மரிய ஜேம்ஸ் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது: நமது நாட்டில் உள்ள எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு உயிர்களும் அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவை கிடைக்காமல் உயிர் இழப்புகள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை.
சாலை மற்றும் இதர விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளை விரைவாகவும், வசதியாகவும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்வதற்கும் அவசர கால மருத்துவ வசதிகளை பெறும் நோக்கில் கொண்டு வரப்பட்டது இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை. இந்த சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் (24×7) செயல்படும்.
குமரி மாவட்டத்தில் வழுக்கம்பாறை – அஞ்சுகிராமம் நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலையாகும். இந்தச் சாலையின் மையப் பகுதியாக புன்னார்குளம் சந்திப்பு விளங்கி வருகிறது. இதன் அருகில் அழகப்பபுரம், திருமூலநகர், இந்திரா நகர், வளன் நகர், சுந்தரபுரம், பொட்டல்குளம், வேதமாணிக்கபுரம், மயிலாடி, மயிலாடி புதூர், சேந்தன் புதூர், காமராஜ் நகர், உசரவிளை, பெருமாள்புரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளது.
இந்த கிராமங்களில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், தனியார் தொழிற் கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகள் ஏராளமாக அமைந்துள்ளது.
குறிப்பாக மயிலாடியில் வாரம் இருமுறை கூடும் வாரச்சந்தை, உழவர் சந்தை, புவிசார் குறியீடு பெற்ற கல்லிலே கலைவண்ணம் கண்ட சிற்பக் கூடங்கள் ஏராளம் அமைந்துள்ளது. மேலும் இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 80 விழுக்காடு பொதுமக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பகுதிகளில் ஏதேனும் விபத்துக்கள் மற்றும் வேறு வகையான அத்தியாவசிய உயிர் காக்கும் தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை சுமார் 8 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தூரத்தில் அமைந்துள்ளது.
இதனால் அங்கிருந்து வாகனம் வந்து சேர்வதற்கு ஏற்படும் கால தாமதத்தின் காரணமாக உயிர் இழப்புகளும், உடல் உறுப்பு இழப்புகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அரசு பொதுமக்கள் நலன் கருதி புன்னார்குளம் சந்திப்பில் உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



