மார்த்தாண்டம், நவ. 19 –
குழித்துறை நகராட்சி ஆணையாளர் பணிச்சுமை கொடுத்ததாக அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக நகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் ஆணையாளர் சுபிதாஸ்ரீ கடந்த மாதம் 28 ம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இந்த நகராட்சியில் ஆணையாளராக பொறுப்பேற்றார் இவர் பொறுப்பேற்ற பிறகு ஊழியர்களுக்கு பல்வேறு நெருக்கடி கொடுப்பதாக ஊழியர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
குழித்துறை நகராட்சி ஆணையாளர் சுவீதாஸ்ரீ கொடுத்த பணிச்சுமை காரணமாக அலுவலக உதவியாளர் ஆனந்த் நேற்று விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை கண்டித்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆணையாளர் பணிச்சுமை கொடுப்பதாக கூறி இன்று காலை 5.30 மணிக்கு வேலைக்கு செல்லாமல் திடிரென நகராட்சி அலுவலகத்தில் குவிந்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களுக்கு ஆதரவாக நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் திமுக, பாஜ, மா.கம்யூ., காங்கிரஸ் கவுன்சிலர்கள் குவிந்தனர். விஷம் குடித்து சிகிச்சை பெற்று வரும் அலுவலக உதவியாளரின் உறவினர்களும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக குவிந்தனர்.
இதனிடையே அதிர்ப்த்தி கவுன்சிலர்கள் ரீகன், ரவி தலைமையில் சிலர் ஆணையாளருக்கு ஆதரவாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். திடிரென்று திமுக நகர் மன்ற செயலாளர் வினு குமார் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடந்த நகர் மன்ற வளாகத்தில் வந்து போராட்டகாரர்களிடம் பணிக்கு செல்ல கட்டாயபடுத்தியதால் இரு கோஷ்டிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இரு கோஷ்டியினரையும் போலீசார் சமரசம் செய்து தூய்மை பணியாளர்களை பணிக்கு அனுப்பி வைத்து நகராட்சி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது
தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக காலையில் இரண்டு மணி நேரம் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டது.



