கன்னியாகுமரி, ஜன. 5 –
பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
காலையில் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். காலையில் சூரியன் உதயமான காட்சியை கண்டு களித்தனர். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலையில் வழக்கம் போல் 8 மணிக்கு படகு சேவை தொடங்கியது. பின்னர் சுற்றுலா பயணிகள் ஆவலுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர். கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டனர்.
கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.



