நாகர்கோவில், ஜன. 21 –
அழகப்பபுரம் சிஎஸ்ஐ சர்ச் தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ் அந்தோணி பிரிட்டோ (40). தொழிலாளியான இவர் கடந்த 11ம் தேதி வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது சகோதரர் அலெக்ஸ் பிரேந்த் (35) என்பவர் உடனிருந்து அவரை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள மருந்தகம் முன்பு அலெக்ஸ் பிரேந்த் அமர்ந்து இருந்தார். அப்போது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் அலெக்ஸ் பிரேந்த்-ன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பி ஓடினார். உடனடியாக அலெக்ஸ் கூச்சலிட்டார். இதனால் செயினை அறுத்த வாலிபர் அங்கிருந்து தப்பிவிட்டார். பொதுமக்கள் சிலர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அங்கும் இங்குமாக ஓடி தலைமறைவானார்.
உடனடியாக ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவ கல்லூரி வளாகம் முழுவதும் தேடிய பின், அங்குள்ள மருத்துவ சிகிச்சை வார்டில் தலைமறைவாக இருந்த அந்த வாலிபரை பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் அருமனை பகுதி, மாத்தூர்கோணத்தை சேர்ந்த சதீஷ் (31) என்பது தெரிய வந்தது. இவரது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரை பார்க்க சதீஷ் வந்துள்ளார். அப்போது மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டதால், செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். சதீஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.



