நாகர்கோவில் டிச 3
தடிக்காரன்கோணம் பகுதியில், பொதுமக்களுக்கு வழிப்பாதையாகவும், ஊர் இளைஞர்களுக்கு பயனளிக்கும் விளையாட்டு மைதானம் ஆகவும் இருந்த நிலப்பகுதியை, பொது மக்களின் எதிர்ப்புக்கு மீறி கையகப்படுத்தி, வேலியிட்டு, எந்தவகையிலும் பயன்படுத்த முடியாத வகையில் வைத்திருக்கும் , வனத்துறையையும் அரசையும் அதிகாரிகளையும் கண்டித்து, பொதுமக்கள் ஒருங்கிணைத்திருந்த அனைத்து கட்சி போராட்டம் மற்றும் மனித சங்கிலி நிகழ்வில், நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது;
இளைஞர்களை போதை போன்ற தவறான பாதைகளில் இருந்து ,நேர்மறைபாதைக்கு வழிநடத்தவும், இளையோர் உடல்,மன திறனுடனும் இருக்க உதவியாக இருந்த ஊர் மைதானம் இப்போது எந்த பயனுமின்றி புதர் மண்டி கிடப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத ஊர் மக்கள், பல்வேறு மனுக்கள்,கோரிக்கைகள் போன்ற முயற்சிகளுக்கு பின், போராட்ட களத்திற்கு வந்திருக்கின்றனர்.
ஊர்கள்தோறும் விளையாட்டு மைதானங்கள் அமைப்போம் என்ற திமுக அரசின் வாக்குறுதிகள் வெறும் தேர்தல் நேர ஏமாற்று என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இருக்கும் மைதானங்களையும் அழிக்கும் முயற்சியில் அரசும் அதிகாரிகளும் இறங்கியிருப்பது வேதனைக்குரிய செயல்.
தடிக்காரன்கோணம் பகுதி மக்களின் இந்த கோரிக்கையும் போராட்டமும் வெற்றி பெறும் வகையில் அவர்களுடன் பக்கபலமாக நாம் தமிழர் கட்சி நிற்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.



