நீலகிரி. ஏப்ரல். 09
கோத்தகிரி அரசு
மருத்துவமனையில் உள்ள பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்து, மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கோத்தகிரி பஸ் நிலையம் அருகே பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மூன்று கோடி ரூபாய் மதிப்பில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் தனியார் பங்களிப்புடன் டயாலிசிஸ் மையம் துவங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கோத்தகிரி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, பல்வேறு நலத்திட்டங்களையும் பயனாளிகளுக்கு வழங்கியதுடன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து நேற்று மாலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, புதிய கூடுதல் கட்டிடம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து 6 மாத காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, ஆண், பெண் உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தரமாக உள்ளதா? எனக் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதியதாக அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ரே எந்திரத்தையும், டயாலிசிஸ் மையம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார். இதையடுத்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் அவர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா? எனவும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வரும் நோயாளிகளுக்கு வேறு ஏதேனும் கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா? என்று கேட்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில்,
தற்போது அரசு மருத்துவமனைகளில் முதுகலை படிப்பு முடித்த டாக்டர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு முன்னுரிமை அடிப்படையில் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்களுக்கான காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



