மத்திய, மாநில அரசுகளின் வணிக விரோத போக்கை கண்டித்து மயிலாடுதுறை நகரில் இன்று சேம்பர் ஆஃப் காமர்ஸ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர்கள் அரைநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் கடைகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்பப்பெற வேண்டும், உள்நாட்டு வணிகத்தை சுரண்டும் ஆன்லைன் வணிகத்தை தடைசெய்ய வேண்டும், மாநில அரசு ஆண்டுதோறும் 6 சதவிகித கூடுதல் சொத்துவரி விதிப்பை திரும்பப்பபெற வேண்டும், வணிக உரிம கட்டணம் உயர்வு, தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவிக்க வேண்டும், மாதாந்திர மின்கட்டண அமலாக்கம் நடைமுறைப்படுத்த வேண்டும், வணிக உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் முறையை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை நகரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. தொடர்ந்து விஜயா திரையரங்கம் சாலையில் ஒன்று கூடிய மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி பகுதியை சேர்ந்த வணிகர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டனர். தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்களில் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பதாகைகளை ஏந்தி கூடினர். தொடர்ந்து சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் மதியழகன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதில் சேம்பர் ஆஃப் செயலாளர் சிவலிங்கம், ஜெயச்சந்திரன் இணை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



