களியக்காவிளை, அக், 31-
குமரி- கேரளா எல்லை சோதனை சாவடி வழியாக போதைப் பொருட்கள்,ரேஷன் அரிசி, மானிய மண்ணெண்ணெய் மற்றும் கனிம வளங்கள் ஆகியவை தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து மாவட்ட எஸ். பி உத்தரவின் பெயரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் குமரி- கேரளா எல்லை சோதனை சாவடி வழியாக கொண்டு வந்து நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் கொட்டப்படுகிறது. இதனை தடுக்கவும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் எல்லை சோதனை சாவடி வழியாக போதை பொருட்கள் கடத்த கூடும் என கருதி களியக்காவிளை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் நேற்று போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கேரளா நோக்கி வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை மேற்கொண்டனர். அப்போது பண்டல் பண்டலாக நூறு பாட்டில் மதுபானம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து விசாரணையில் இவர்கள் கேரளா மாநிலம் காட்டாக்கடை பகுதிக்கு மதுபானம் கடத்திச் சென்றது தெரிய வந்தது. மேலும் பதுக்கி வைத்திருந்த மதுபானம் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபானத்தை கடத்தி வந்த காட்டாக்கடை பகுதி சேர்ந்த அனல்(33), காட்வின்(35),விழிஞம் பகுதியை சேர்ந்த பைசல்(42) ,பூவச்சல் பகுதியைச் சேர்ந்த அனீஸ்(30) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.