தூத்துக்குடி மாநகரில் இருபது ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் அவருக்கு, தூத்துக்குடி மாநகரில் இருபது ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறையை சம்பந்தப்பட்ட கடையை ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் தலைமையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், டேவிஸ்புரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட இருபது ரூபாய் பிரியாணி கடையின் தயாரிப்புக் கூடத்தினை (27.01.2025) ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், பிரியாணிக்குப் பயன்படுத்திய கோழி இறைச்சியில் எந்தவிதமான துர்நாற்றங்களோ, வேற எவ்விதமான இயல்புக்கு புறம்பான அம்சங்களோ கண்டறியப்படவில்லை.
இருப்பினும், அதிலிருந்து உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தயாரிக்கப்பட்ட பிரியாணியும் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. உணவு பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டவுடன் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே வேளையில், உணவு தயாரிப்புக்கூடம் மிகவும் அசுத்தமாகவும், சமைக்கும் பகுதியில் பூனை, நாய் போன்ற பிராணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததாலும், வாங்கிய மூலப்பொருட்கள் மற்றும் விற்பனை செய்த உணவுப் பொருட்களுக்கு உரிய பில்கள் இல்லாததாலும், உணவு பகுப்பாய்வு அறிக்கைகள் இல்லாததாலும், சமையலறை பாதுகாப்பற்று இருப்பதாலும், பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, அந்த உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமைத்தினை இடைக்கால ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆணை இன்று பிறப்பிக்கப்படும்மேலும், உணவு தயாரிப்புக் கூடத்தை சீர் செய்ய முன்னேற்ற அறிவிப்பு வழங்கப்பட்டு, அவற்றை சரி செய்த பின்னர் சம்பந்தப்பட்ட வணிகருக்கு உணவகத்தினை இயக்க அனுமதி வழங்கப்படும். மேலும், பிரியாணி பொட்டலத்தில் சிக்கன் பீஸ் சிதைந்த துகள்களாக இருப்பதால், சிக்கன் பிரியாணி என்ற வாசகம் நுகர்வோரைத் தவறாக வழி நடத்தும் என்பதினால், இதுகுறித்தும், இக்கடைக்கு சிக்கன் விற்பனை செய்த நிறுவனத்திடமும் விசாரணை மேற்கொண்டு, தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்கள் ரகசியங்கள் காக்கப்படும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், நியமன அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதினால், சட்டத்திற்குட்பட்டு வணிகம் செய்து, வணிகத்தினை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.