திண்டுக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மத்திய, மாநில அரசுகளின் வணிக விரோத சட்டங்களை திரும்ப பெறக் கோரி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட மண்டல தலைவர் D.கிருபாகரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட செயல் தலைவர் S.முகமதுகனி வரவேற்புரை ஆற்றினார். திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் G. சுந்தரராஜன், முன்னாள் தலைவர் SKC குப்புசாமி, முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் S.நஜீர்சேட் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளக்க உரையாற்றிய போது பேசியதாவது,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் என்பது சிறு, குறு, அடித்தட்டு வணிகர்களையும், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்த கட்டமைப்பைக் கொண்ட வணிகர்களின் கூட்டமைப்பு. தமிழகம் முழுவதும் 31 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பேரமைப்பு ஆகும்.
அண்மையில் மத்திய அரசின் அறிவிப்பு ஆணை எண். 9/2024-ன் மூலம் அறிவித்துள்ள கடை வாடகை மீதான 18 சதவீதம் GST வரி என்பது ஏறத்தாழ 70 சதவீதம் வணிகர்களை மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் நடவடிக்கை. அதைப்போலவே தமிழக அரசு அறிவித்துள்ள ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்துவரி உயர்வு என்பது கட்டிட உரிமையாளர்களுக்குச் சுமையாக மாறி, வணிக கட்டிட வாடகை உயர்வுக்கும் வழி வகுத்து வணிகர்களையும், நுகர்வோர்களையும் பெருமளவு பாதிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவே தமிழகம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் A.M. விக்கிரமராஜா அவர்களின் ஒப்புதலோடு சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாவட்டத் தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டமாக அறிவித்து, கண்டன முழக்கங்கள் முழங்கிட, மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய ,மாநில அரசுகளின் வணிகர்களின் மீதான வணிக விரோத சட்டங்களையும், நடவடிக்கைகளையும் கண்டித்து வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றிட கோரிக்கைகளான
மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18 சதவீதம் GST வரி விதிப்பை திரும்பப் பெற்றிட வலியுறுத்தியும், மாநில அரசு ஆண்டுதோறும் 6 சதவீதம் கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்பப் பெற்றிட வலியுறுத்தியும்,
வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும் , குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவித்திட வலியுறுத்தியும், மாதாந்திர மின் கட்டண அமலாக்கம் நடைமுறைப்படுத்திடவும்,
வணிக உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தலை உடனடியாக நடைமுறைபடுத்திட கோரியும் , மேலும் அதிகரித்து வரும் சமூக விரோதிகள் ரவுடிகள் மாமுல் கலாச்சாரங்களை முடிவுக்கு கொண்டு வர வணிகர்கள் தொழில்துறையினர் தயாரிப்பாளர்களுக்கு என சிறப்பு வணிகர் பாதுகாப்பு சட்டம் உடனடியாக இயற்றிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளின் வணிக விரோத சட்டங்களை திரும்ப பெறக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், வணிகவரித்துறை அதிகாரி ஆகியோரிடம் மத்திய, மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வரி சம்பந்தமாக மனு அளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் S.கருணாகரன் நன்றி கூறினார்.