நாகர்கோவில், நவ. 17 –
பாஜகவின் வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா விடுடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக என டபுள் இன்ஜின் அரசு நடந்து வந்தது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இணக்கமான அணுகுமுறையும் இருந்தது.
இதனால் மத்திய அரசின் நிதியையும், மத்திய அரசோடு இருக்கும் இணக்கமான அணுகுமுறையினால் பீகார் மாநிலம் ஏராளமாக பெற்றது. மத்திய அரசின் திட்டங்களும் அங்கு தடை இன்றி செயல்படுத்தப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு எந்த திட்டத்தை செயல்படுத்த முன் வந்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடும் அரசாக திமுக உள்ளது.
பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னால் காட்டு தர்பார் ஆட்சி நடத்திய ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கொடூர முகத்தை அந்த மக்கள் அறிந்திருந்தனர். பீகார் மக்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு பெண்களின் முன்னேற்றம் என ஒவ்வொன்றிலும் மத்திய பாஜக அரசும், மாநில நிதிஷ்குமார் அரசும் தனிக்கவனம் செலுத்தியதை நாடும் நாட்டு மக்களும் அறிவார்கள்.
நிலைமை இப்படி இருக்க சபாநாயகர் அப்பாவுவோ தேர்தல் ஆணையத்தால் பாஜக வெற்றி பெற்றதாக சொல்லி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளையும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியினரே வெற்றி பெற்றார்களே அது கூட தேர்தல் ஆணையத்தின் கைங்கர்யம் தானா? எங்கெல்லாம் தாங்கள் வெற்றி பெறுகிறார்களோ அங்கெல்லாம் தங்கள் உழைப்பால் கிடைத்த வெற்றி என்றும், தோல்வியடையும் இடங்களில் எல்லாம் தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவதையும் வழக்கமாகவே கொண்டிருப்பது தான் திராவிட மாடலா?
பீகார் மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் பாஜகவுக்கு இருந்ததை தான் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அப்பாவு போன்றவர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.
இனியேனும் சபாநாயகர் அப்பாவு, தன் புலம்பலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் தன்னிச்சையான அதிகாரமிக்க அமைப்புகளில் ஒன்றான, ஜனநாயகத்தின் போர் குரலான தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அப்பாவு, தான் வகிக்கும் சபாநாயகர் எனும் பொறுப்பிற்கே இழுக்கு சேர்ப்பதாகவே அர்த்தம். இனியேனும் அவர் தான் இருக்கும் பதவி, அதன் பொறுப்பு ஆகியவற்றை உணர்ந்து பேச வேண்டும். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அவரது தலைவர் பாணியிலேயே பேசுவது வன்மையான கண்டனத்திற்குரியது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது



