ஈரோடு ஏப் 12
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் பள்ளி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆரம்ப நிலை மைய குழந்தைகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா செல்லும் வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது
ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் கொங்கு அறிவாலயம் சிறப்புப்பள்ளி மற்றும் அரிமா சிறப்பு பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் இந்த கல்வி சுற்றுலாவில் பங்கு பெற்றனர். அவர்களை வழி நடத்த சிறப்பாசிரியர்கள் மற்றும் அழைத்து செல்ல மாற்றுத்திறன் உடைய குழந்தைகளின் பெற்றோர்கள் என மொத்தம் 55 பேர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஒருநாள் கல்வி சுற்றுலாவில் பவானிசாகர் அணை பூங்காவிற்கு சென்று, கற்றல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதுபோன்ற சுற்றுலா மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த உதவியாக அமையும் என்று கூறினார்.
ஆட்சித்தலைவர் சுற்றுலா செல்லும் குழந்தைகளுக்கு குடிநீர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் பழனிச்சாமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



