தருமபுரி, நவம்பர் 21 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் இணைய வழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனித சக்திக்கு மீறிய பணி குறியீட்டினை குறைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நில அளவர் பணிக்கான தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு காலியாக உள்ள நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்த வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும்.
வருவாய்த் துறையில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள வருவாய் கோட்டங்களுக்கு உரிய கோட்டை ஆய்வாளர் பணியிடங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். புல எல்லை மனுக்கள் தொடர்பான இணைய வழி விண்ணப்பத்தில் முதல் நிலை மற்றும் மேல்முறையீடு நிலை தொடர்பாக உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். நில அளவை களப்பணியாளர்களின் உட்பிரிவு செய்யும் அதிகாரத்தினை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கியதை திரும்ப பெற்று வழங்க வேண்டும். உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட இணை செயலாளர் முரளிதரன், தருமபுரி கோட்டத் தலைவர் துரை, தருமபுரி கோட்ட துணைத் தலைவர் சிவசங்கர், அரூர் கோட்டத் தலைவர் சக்திவேல், அரூர் கோட்ட துணைத்தலைவர் ராகவேந்திர பிரபு, மாவட்டத் தலைவர் சுருளிநாதன், மாவட்டச் செயலாளர்கள் தெய்வானை, காவேரி, மாநில செயலாளர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இந்த போராட்டத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



