அரியலூர், ஜன;08
தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே அரியலூர் மாவட்ட ஆளும் திமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய தலைமைக் திமுக பேச்சாளர் இரா.தி.சபாபதிமோகன், ஆளுநர் மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவை மரபை மீறி உள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதையை ஏற்படுத்தியும் உள்ளார்.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் மற்றும் தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அங்கு முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடலும், முடிவில் தேசிய கீதம் தான் இசைக்கப்படும் என்று 1991 ஆம் ஆண்டு அப்போதையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதுக் கூட தெரியாத அந்த கட்சியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார் .
தமிழக அரசு கொண்டுவரும் பல்வேறு தீர்மானங்களைக் ஆளுநர் கிடப்பில் போட்டு விடுவதாகவும் குற்றம் சாட்டிய அவர், எனவே ஆளுநரே திரும்பி போ என்ற முழக்கம் இன்று தமிழகம் முழுவதும் ஒலிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலர் சி.சந்திரசேகர் தலைமை வகித்தார். கட்சியின் சட்ட திருத்தக் குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், நகரச் செயலர் முருகேசன், மாநில பொதுக் குழு உறுப்பினர் இரா.பாலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ. இளையராஜா, நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்