நாகர்கோவில், ஜன. 5 –
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் உள்ளது. பரிகார ஸ்தலமாக உள்ளதால் இங்கு தினமும் ஏராளமான வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தற்போது சபரிமலை சீசன் என்பதால் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதன்படி நேற்று ஞாயிறு அதிகாலையில் இருந்து பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் கோயில் தெப்பக்குளத்தில் காலை 6 மணி அளவில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்தது. மேலும் தெப்பக்குளம் அருகில் செல்ல முடியாத வகையில் துர்நாற்றம் வீசியது. இதை பார்த்த பக்தர்கள் சிலர் கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வடசேரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குளத்துக்குள் கிடந்த சடலத்தை வெளியே மீட்டனர். உடல் குளத்துக்குள் விழுந்து இரண்டு நாட்கள் ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் எனவும் விசாரணை நடக்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயில் பக்தர்கள் பெரும் அளவில் வந்திருந்தனர். ஆனால் பக்தர்கள் கோவில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உடலை மீட்டு வெளியே கொண்டு சென்ற பின் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தன. பின்னர் காலை 9:30 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.



