மார்த்தாண்டம், செப். 6 –
குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கிள்ளியூர் வட்டம், முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குட்பட்ட மெதுகும்மல், குளப்புரம், அடைக்காகுழி, சூழால், நடைக்காவு, மங்காடு, வாவறை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் ஐந்தாம் கட்ட முகாம் மரியகிரி மலங்கரை கத்தோலிக்க பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து கூறியதாவது: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் என்ற ஆரோக்கியமான இத்திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இம்முகாமில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்குகின்றனர்.
குமரியில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற முதல் முகாமில் 1650 நபர்களும், திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரண்டாவது முகாமில் 1438 நபர்களும், கல்குளம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற மூன்றாவது முகாமில் 2850 நபர்களும், அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற நான்காவது முகாமில் 1712 நபர்களும் வெளி நோயாளிகளாக கண்டறியப்பட்டு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்றைய தினம் ஐந்தாவது முகாம் மலங்கரை கத்தோலிக்க பொறியியல் கல்லூரி (மரியகிரி) வளாகத்தில் நடந்தது. இம்முகாமில் 1500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டனர்.
மேலும் முகாமில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மருத்துவ பிரிவுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பயனாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு வருகை தந்துள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடப்பட்டது. மருத்துவ பரிசோதனை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாமுக்கு வரும் மக்களை அக்கறையுடன் பரிவுடன் கவனிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு. சகாய ஸ்டீபன் ராஜ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. லியோ டேவிட், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. அரவிந்த் ஜோதி, துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.



