அமைச்சர் கீதா ஜீவன் போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருப்பது மனித உரிமை மீறல் செயல் எனவும், அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சிபிஐஎம்எல் குமரி மாவட்ட செயலாளர் தோழர் அந்தோணி முத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இவரின் இத்தகைய செயல் தங்கள் உரிமைகளுக்காக போராடும் அங்கன்வாடி ஊழியர்களின் மன நிலையை பெரிதும் பாதித்துள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் நன்கு உணர்ந்து பேச வேண்டும் இவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என நாங்கள் உங்களுக்கு தெளிவாக விளக்குகின்றோம் :-
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பாக காத்திருப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்பட 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஆசிரியரும் ஊழியரும் கூடுதல் மையங்களை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் குழந்தைகளுக்கான கல்வி பாதிக்கிறது. மேலும் பல மையங்களில் சமையலரே, குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் உள்ளனர். இதுகுறித்து அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அங்கன்வாடி மையங்களில் பயனாளிகள் சத்துமாவு பெறுவதை உறுதி செய்யும் வகையில் போஷன் டிராக்கர் என்ற செயலியை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மையங்கள், கிராமப்புறங்களில் உள்ளன.அங்கு இணைய வசதி இல்லாததால், இந்த செயலியை பயன்படுத்துவது சவாலாக உள்ளது. இதனால் தினசரி 3 பயனாளிகளுக்கு கூட சத்துமாவு வழங்க முடியவில்லை. எனவே இந்த முறையை அரசு கைவிட வேண்டும்.அது போல் கோடை காலத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில் மே மாதம் முழுவதும் விடுமுறை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டுமே போராடி வருகின்றனர்.
இதை கூட சரியாக புரிந்து கொள்ள முடியாத ஒருவருக்கு தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பதவி வழங்கி இருப்பது வியப்பாக உள்ளது.
எனவே அமைச்சர் கீதா ஜீவனின் பேச்சுக்கு கண்டனத்தை தெரிவிப்பது மட்டுமல்லாமல் அமைச்சர் கீதா ஜீவன் போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் தேவைகளை முதலாவது கேட்டு அறிந்து அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டுமே ஒழிய சரியாக ஆராயாமல் நடவடிக்கை எனும் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



