மார்த்தாண்டம், மார்-8
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை தீவிரப்படுத்தி, விதி மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மார்த்தாண்டன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடப்படுத்தப்பட்டது. கடந்த மாதம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மார்த்தாண்டம் பகுதியில் பைக் ஓட்டிய சிறுவனை பிடித்து விசாரித்த போது, சிறுவனுக்கு 17 வயது தான் ஆகி இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார் சிறுவரின் பெற்றோர் மீது மோட்டார் வாகன சட்டம் 1999 ஏ பிரிவின் கீழ் சிறாருக்கு விதி மீறி வாகனம் ஓட்ட கொடுத்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு குதித்துறை ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரித்த நீதிமன்றம் சிறுவனின் பெற்றோருக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த சிறுவனின் தாய் ஒரு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் உட்கார வைத்து கடுமையாக எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்.