திருவட்டாறு, மார்-3
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் திற்பரப்பு அருவி ஒன்றாகும். இவ்வருவி நாகர்கோவிலிருந்து 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் திற்பரப்பு அருவிக்கு அதிகளவில் வருகை புரிகின்றனர். தற்போது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ரூ.4.30 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உடைமாற்றும் அறை, கழிவறைகள், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த பணிகளை கலெக்டர் அழகு மீனா நேற்று ஆய்வு செய்தார். பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பறைகள் தற்காலிகமாக ஏற்படுத்தி சுற்றா பயணிகளுக்கு இடையூறு இல்லமால், அனைத்து பணிகளையும் ஜூன் மாதத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் திருக்கோவில் சுற்றுச்சுவர்களில் உள்ள புதர்களை அகற்றி வர்ணம் பூசி வண்ண ஓவியங்கள் தீட்டி அழகுபடுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், உதவி பொறியாளர் விஜில்சிங், திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.