குளச்சல், டிசம்பர் 31 –
குளச்சல் அருகே கல்லுக் கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (58) கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. ராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 26 ஆம் தேதி வழக்கம் போல் ராஜா மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் மனைவி கோபித்துக் கொண்டு தனது இரண்டாவது மகளுடன் அருமனையில் உள்ள மூத்த மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் 29ஆம் தேதி மனைவி மகளுடன் திரும்ப வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு படிக்கட்டில் காயங்களுடன் ராஜா கிடந்துள்ளார். இதை அடுத்து மனைவி கணவரை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை முடிந்த வீடு திரும்பிய ராஜா, அன்று இரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
புகாரின் பேரில் குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜாவின் உடலில் பலத்த உள் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது கடந்த 26 ஆம் தேதி ராஜா குடித்து விட்டு தகராறு செய்ததும், மனைவி தனது மருமகன் சசி (35) என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதை அடுத்து மாமனார் வீட்டுக்கு வந்த சசி, ராஜாவை கண்டித்ததுடன் மாமியார், கொழுந்தியாள் ஆகியோரை அருமனையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சசி தனியாக கல்லு கூட்டதற்கு வந்து மாமனார் ராஜாவிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜா படிக்கட்டில் மயங்கி கிடந்து பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்து தெரிய வந்துள்ளது. குளச்சல் போலீசார் கொலை வழக்காக மாற்றி சசியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


