ஈரோடு மே 31
ஈரோட்டை அடுத்த பெருந்துறை சுங்கச்சாவடி அருகில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கோயம்புத்தூர் ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் திருச்சி ஆகிய 10 மாவட்டங்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அடுத்த மாதம் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. விவசாயிகள் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள். ஏற்றுமதியாளர்களுக்கு இடையே நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள். வேளாண் இயந்திரங்கள், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் இக்கண்காட்சி நடத்தப்படவுள்ளது. மேலும், இக்கண்காட்சியில் அரசு துறைகளின் சார்பில் 70 அரங்குகளும், தனியார் நிறுவனங்கள் சார்பில் (உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உட்பட) 130 அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. நாள் ஒன்றுக்கு 5000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இக்கண்காட்சியில் விவசாயிகளுக்கு தேவைப்படும் நவீனரக மற்றும் பாரம்பரிய விதைகள், பழச்செடிகள், குழித்தட்டு நாற்றுகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் அங்கக இடுபொருட்கள். நவீன வேளாண் இயந்திரங்கள் நுண்ணீர் பாசன உபகரணங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் இ-வாடகை, உழவன் செயலி, வேளாண் அடுக்ககத்தில் விவசாயிகளுக்கான பதிவு போன்ற சேவைகளும் வழங்கப் படவுள்ளன.
இதை யொட்டி அமைச்சர் முத்துசாமி வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணியை துவக்கி வைத்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் அந்தியூர் செல்வராஜ் எம் பி வி.சி சந்திர குமார் எம் எல் ஏ மத்திய மாவட்ட திமுக செயலாளர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.