நாகர்கோவில், மே 15
குமரி மாவட்டத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில் கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய நேர கட்டுப்பாடுகள் உள்ளன. நேர கட்டுப்பாட்டை மீறி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேர கட்டுப்பாட்டை மீறி டாரஸ் லாரிகள் மாவட்டத்திற்குள் வருவதாக எஸ்.பி. ஸ்டாலினுக்கு புகார்கள் வந்தன. இதை அடுத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார். அதன்படி கடந்த இரு நாட்களாக நேர கட்டுப்பாட்டை மீறும் வாகனங்கள், அதிவேகமாக வரும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், கனரக வாகனங்கள் கனிம வளத்துறையால் எச்சரிக்கப்பட்ட அளவை தாண்டி அதிக பாரம் ஏற்றி வந்த 3 கனரக வாகனம் மற்றும் அதிவேகமாக வந்த வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் மாவட்டம் முழுவதும் சோதனை நடந்தது. இதில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மாவட்டத்திற்குள் நுழைந்த 6 டாரஸ் லாரி டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.