கன்னியாகுமரி, நவ. 27:
மயிலாடி கூண்டு பாலம் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைக்கப்ட்டு பணிகள் முடிவடைந்து பல மாதங்களாக சீரமைக்கப்படாமல்
குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் மயிலாடி கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் தட்டு தடுமாறி வாகனங்கள் செல்கின்றன.
இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில்
மருந்துவாழ் மலையை சுற்றியுள்ளப் பகுதியில் சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக
பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்காக மருந்துவாழ்மலை
பிரதான கால்வாய் உருவாக்கப்பட்டது.
இந்த கால்வாய் சுமார் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு செல்லும் வகையில் மேற்கு பிரிவு கால்வாய், கிழக்கு பெரிய மற்றும் சிறிய பிரிவு கால்வாய் ஆகியவை உருவாக்கப்பட்டது.
அதன் வழியாக விவசாயத்திற்கு நீர்ப்பாசனம் கிடைத்து வந்தது.
இந்த கால்வாயானது அஞ்சுகிராமம் வழுக்கம்பாறை நெடுஞ்சாலையில் மயிலாடிக்கும் புன்னார்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இந்தச் சாலையின் குறுக்கே கூண்டு வடிவத்தில் பாலம் அமைத்து அதன் மேற்பகுதியில் கால்வாயும், அடிப்பகுதியில் தரைவழி போக்குவரத்தும் நடைபெற்று வந்தது.
அஞ்சுகிராமம் வழுக்கம்பாறை சாலையின் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த கூண்டு பாலம் இருந்து வருகிறது.
கல்லிலே கலைவண்ணம் கண்டு சிற்பங்கள் செய்து உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படும் உலக புகழ்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற கற்சிற்பங்கள் செய்யும் இடமான வளர்ந்து வரும் மிகப்பெரிய தொழில் நகரமான மயிலாடிக்கு சிற்பங்களுக்கு தேவையான கற்கள் இந்த சாலை வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது.
அதுமட்டுமின்றி வாரம் இருமுறை செயல்படும் வாரச்சந்தை மற்றும் உழவர் சந்தைக்குத் தேவையான காய்கனி உள்ளிட்ட பொருட்களும் இந்த வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் இருந்து உவரி, ஆற்றங்கரை பள்ளிவாசல், திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட ஆன்மீக சுற்றுலாத் தலங்களுக்கும், தூத்துக்குடி விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்பவர்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வந்தனர்.
மேலும் ரஷ்யா நாட்டிலிருந்து கொண்டு வரப்படும்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலைக்கு தேவையான உபகரணங்களை இந்த வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டும். அந்த வகையில் இந்த கூண்டு பலம் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு செல்வதற்கு இந்த சாலையையே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூண்டு பாலம் அகலமும் உயரமும் குறைந்து இருந்ததால் இப்போதைய போக்குவரத்திற்கு ஏற்றார் போல் இல்லாமல் மிகவும் இடையூறாக இருந்து வந்தது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி நடக்கும் விபத்துக்களால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. எனவே இந்தப் பாலத்தை மறு சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த சிறிய கூண்டு பாலத்தை மறுசீரமைக்க சுமார் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலப்பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது.
இதனால் மாணவ மாணவிகள் முதியவர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்தனர். பொதுமக்கள் நலன் கருதி தரைப்பகுதியை விரைவாக சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அனைவரின் தொடர் அழுத்தம் காரணமாக தரைப்பகுதியை சரியாக சீரமைக்காமல் அவசரமாக திறந்து விடப்பட்டு பேருந்துகள் மற்றும் அனைத்து வகையான வாகனங்களும் இந்த வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பல மாதங்களாகியும் தரைப்பகுதி மட்டும் இன்னும் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை தட்டு தடுமாறி செல்கிறது. சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.
மழைகாலங்களில் சில நேரங்களில் இந்த வழியாக வரும் கனரக வாகனங்கள் பாலத்தின் நடுப்பகுதியில் பதிந்து விடும் சம்வமும் அடிக்கடி நடைபெறுகிறது. மேலும் சேறும், சகதியுமாக காணப்படுவதால் இருசக்கர வாகனங்கள் குண்டு,குழிகளில் விழுந்து காயங்களுடன் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து செல்லும் அவலநிலையும் அடிக்கடி ஏற்டுகிறது.
இதனால் போக்குவரத்து நெருக்டியும் ஏற்படுகிறது. எனவே தரைப்பகுதியை போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.