கன்னியாகுமரி, ஜன. 2-
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார். அவருடன் நாகர்கோவில் நகராட்சி உறுப்பினர் ஐயப்பன், மாவட்ட பா.ஜ.க செயலாளர் சுபாஷ், குமரி சிவா உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பா.ஜ.க மாநிலத்தலைவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வரும் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சிக்கு வந்து புதுக்கோட்டையில் நடைபெறும் தமிழனின் தலை நிமிர் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மறுநாள் ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், அங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்று விட்டு டெல்லி திரும்புகிறார். அமித்ஷா வருகை தமிழகத்தில் மிகப்பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் போதை பொருட்கள், வட மாநிலத்தவர் தாக்குதல் அதிகரித்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இது வரை முடிவு செய்யவில்லை. தமிழகத்தில் இபிஎஸ் தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. நடிகர் விஜய்யை பாஜக கூட்டணிக்கு அழைப்பீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு பொறுத்திருந்து பார்ப்போம் என பதிலளித்தார்.


