தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவின் முதலாம் காலாண்டு கூட்டம் தருமபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்கள். அப்போது ஆட்சியர் கூறியதாவது தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை மூலமாக பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், வாழ்க்கை தர உயர்விற்காகவும், எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். மேலும் எளிய நிலையில் இருக்கும் மக்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். இந்த துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து உரிய
நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ஒரு இயக்குனரை நியமித்துள்ளதோடு, தாட்கோ தலைவரையும் நியமித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான
பல்வேறு திட்டங்கள் இந்த துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய எந்திரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தூய்மை பணியாளர்களை பயன்படுத்தக் கூடாது. அவர் தூய்மை பணியா
ளர்கள் ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். கூட்டத்தில் அரூர் உதவி ஆட்சியர் சின்னசாமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், நலக்குழு மற்றும் பற்றாளர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.