ஈரோடு ஜூலை 24
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் முகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. “தமிழ்ச்செம்மல்” விருதாளருக்கு ரூ.25000 விருதுத்தொகையும் தகுதியுரையும் வழங்கப்பெற்று வருகின்றன. இவ்வகையில் 2024 ஆம் ஆண்டிற்கு “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ்வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயற்பட்டுவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள். விருதுக்கான விண்ணப்பத்தினை உரியவாறு பூர்த்தி செய்து தன் விவரக்குறிப்பு நூல்கள் கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் ஒருபடி இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ச் சங்கங்கள் தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்கு தகுதியாக குறிப்பிடத்தக்க பணிகள், தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக்கடிதம் மாவட்டத்தில் செயற்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்களுடன், ஆற்றிய தமிழ்ப் பணிகளுக்கானச் சான்றுகள், வட்டாட்சியரிடம் பெறப்பட்ட குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ஈரோடு மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் அடுத்த மாதம் 9 ந் தேதிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும்.
இத்தகவலை ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.