நாகர்கோவில் மார்ச் 11
தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை எனவும், மின் மயமாக்கல், அகல ரயில் பாதை, தென் தமிழகத்தின் ரயில் நிலையங்களின் தரம் மேம்படுத்துதல் மற்றும் நவீனமயமாக்கல், தென் தமிழகத்தின் நகரங்களை இணைக்கும் வகையில் மெமு ரயில் சேவைகள், மக்கள் தேவைக்கு ஏற்ப அதிக ரயில் சேவைகள் போன்ற ரயில் பயணிகளின் நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார்.
கடந்த பல வருடங்களாக ரயில்வே திட்டங்களுக்கான நிதிகளை ஒதுக்குவதில் தென் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. போதிய நிதி இல்லாத காரணத்தாலும், சிறப்பான செயல் திட்டம் இல்லாத காரணத்தாலும் பல ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
தமிழ்நாட்டில் ரயில் பாதைகளின் மின்மயமாக்கல் முழுமையடையாமல் உள்ளது, மதுரை – ராமேஸ்வரம் மதுரை – திண்டுக்கல். மற்றும் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான முக்கியமான பாதைகள் இன்னும் மின்மயமாக்கப்படாமல் காத்திருக்கின்றன. இதேபோல், குறுகிய பாதையிலிருந்து அகல ரயில் பாதை மாற்றும் பணி நிதி ஒதுக்கப்பட்ட பிறகும் கூட நிலுவையில் உள்ளது.
தென் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களான மதுரை, கன்னியாகுமரி போன்ற நிலையங்கள் நவீனமயமாக்கல் மற்றும் தரம் உயர்த்தும் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.
தென் தமிழகத்தில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் மிக அதிகமாக அலைமோதுகிறது. இதை தவிர்க்க புதிய ரயில்கள் தேவை என்று கோரிக்கையும் மத்திய அரசின் பார்வைக்கு பலமுறை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் இருந்த போதிலும் பல்வேறு காரணங்களை கூறி ரயில்வே நிர்வாகம் இதை தவிர்த்து வருகிறது. மேலும் இதற்கான பணிகள் நடைபெறும் இடங்களில் ஆமை வேகத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் மெமு ரயில்களை இயக்க வேண்டும் என்றும் நீண்ட நாளாக கோரி வருகிறோம்.
இந்த நீண்ட நாள் மக்கள் தேவைகளை பாராளுமன்றத்தில் நேரம் ஒதுக்கி விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.