நாகர்கோவில், செப்டம்பர் 4 –
கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் ஆவணி திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோட்டார் ஏழகரத்தில் பிரசித்தி பெற்ற பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் ஆவணி திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி அலங்கார தீபாராதனை, சுவாமி திருவீதி உலா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை சுமார் 8:30 மணி அளவில் திருத்தேர் வளம் தொட்டு இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் மற்றும் கவுன்சிலர்கள், விழா குழுவினர், பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8:30 மணிக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. நாளை (5ம் தேதி) 10ம் திருவிழா நடக்கிறது. காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை, 10.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளல் நடக்கிறது. ஒழுகினசேரி ஆராட்டு துறையில் சுவாமிக்கு ஆராட்டும், இரவு 12 மணிக்கு வான வேடிக்கையும் நடக்கிறது.



