திருப்பத்தூர், ஆக. 25 –
திருப்பத்தூர் மாவட்டம் அவுசிங்போர்டு அடுத்த தருமபுரி செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் மேஸ்ட்ரோ தமிழ் கலைக் கூடத்தில் கவிஞர் வே. தீபா எழுதிய காற்றை அசைக்கும் சிறகு, கவிஞர் வே. மணிகண்டனின் ஓசை தரும் மௌனம் ஆகிய இரண்டு நூல்கள் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதுகலை ஆசிரியர் ப. சக்திவேணி அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. அ முனிராஜ், ஊத்தங்கரை வித்ய விகாஸ் தாளாளர் செ. சக்திவேல், சித்த மருத்துவர் தலைமையாசிரியர் (ஓய்வு) திரு ந. முனுசாமி, கௌரவ விருந்தினர்களாக முதுகலை ஆசிரியர் தங்கமுத்து, தமிழ்நாடு காவல்துறை ஞான ஷைலா மேரி, நாடகவியலாளர் திரைப்பட நடிகர் முனைவர் ஆதன் குமார், தலைமையாசிரியர் காத்திக் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கவிஞர் தீபா எழுதிய காற்றை அசைக்கும் சிறகு நூலின் முதல் பிரதியை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் வெளியிட நூல் ஆசிரியரின் தாயார் கல்யாணி பெற்றுக்கொண்டார். இந்த நூலினை அறிமுகம் செய்து முதுகலை ஆசிரியர் திறனாய்வாளர் தங்கமுத்து விளக்கி பேசினார். கவிஞர் மணிகண்டன் எழுதிய ஓசை தரும் மௌனம் நூலின் முதல் பிரதியை ஊத்தங்கரை வித்ய விகாஸ் பள்ளியின் தாளாளர் சக்திவேல் வெளியிட சித்த மருத்துவர் தலைமையாசிரியர் (ஓய்வு) முனுசாமி பெற்றுக்கொண்டார்.
இந்த நூல் குறித்து தமிழ்நாடு காவல்துறை திறனாய்வாளர் ஞான ஷைலா மேரி நூலின் மையக்கரு, இடம்பெற்றுள்ள செய்திகளின் சுருக்கத்தை சங்க நூல்களை ஒப்பீட்டு பேசினார். இதே போன்று வாழ்க தமிழ்மொழி பாடலை சித்த மருத்துவர் தலைமையாசிரியர் (ஓய்வு) முனுசாமி வெளியிட மைதிலி பெற்றுக்கொண்டார். பெண்கள் – பெண் குழந்தைகளுக்கு நேரிடும் குழந்தை பாலியல் வன்கொடுமை பாடலான முத்துமணி ரத்தினமே பாடலை தமிழ்நாடு காவல்துறை ஷைலா மேரி வெளியிட முதுகலை ஆசிரியர் தீபா பெற்றுக்கொண்டார்.
பெண்களுக்கு எதிராக நிகழும் அமில வீச்சு விழிப்புணர்வு பாடலான அழகே அழகே பாடலை தருமபுரி தமிழ் கவிஞர் மன்ற தலைவர் பாவலர் மலர்வண்ணன் வெளியிட கோயம்புத்தூர் அழகேசன் பெற்றுக்கொண்டார். மேலும் அருண் நடித்த காதலின் தனிமை ஆல்பத்தினை திரைப்பட நடிகர் முனைவர் ஆதன்குமார் வெளியிட திலகவதி, பொறியாளர் மைதிலி, மென் பொறியாளர் அருண்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பாடல்களை மேஸ்ட்ரோ தமிழ் கலைக்கூடம் தலைமையாசிரியர் கார்த்திகேயன் பாடினார். 3 பாடல்கள் மற்றும் 1 ஆல்பம் பாடல்களை கவிஞர் பாடலாசிரியர் வே. மணிகண்டன் எழுதியது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியில் விஸ்டம் லைட் அறக்கட்டளையின் மூலம் மாற்றுத் திறனாளி மற்றும் பெற்றோரை இழந்த மூன்று மாணவிகளுக்கு தலா ரூ.5000/- வழங்கினர். விஸ்டம் அறக்கட்டளையும் செயல்பாடுகளையும் மென்பொறியாளர் அ. லோகேஸ்வரி அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கூத்தப்பட்டி பழனி தமிழ்மகன் இளங்கோ, ராஜேஷ் குமார், பாவலர் மதனகோபாலன், கோகுல்காளியப்பன் பழனி, முல்லை, சக்திவேணி, அரூர் பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் ஆதி சௌந்தரராஜன் (மருத்துவத்துறை) மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை யோகப்பிரியா, மேஸ்ட்ரோ தமிழ் கலைக்கூடம் தலைமையாசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். கவிதேடல் பதிப்பகம் கோகுல் காளியப்பன் நன்றியுரை ஆற்றினார்.



