நாகர்கோவில், ஆக. 19 –
தாய் தமிழ்நாட்டின் தென் எல்லையாம் குமரி மண்ணை காத்த முன்னவர்களில் மிக முக்கியமான தலைவர் குஞ்சன் நாடார் நினைவு நாளை போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து மரிய ஜெனிபர் தெரிவித்ததாவது: திருவாங்கூர் சமஸ்தான இனவெறி, சாதிவெறி மேலாதிக்கத்தை எதிர்த்து தமிழர் உரிமைகளுக்காய் திருவாங்கூர் தமிழர் காங்கிரசில் இணைந்து போராடியவர். தன்மீது மக்கள் வைத்திருந்த அளவற்ற அன்பால் 1952-ல் சுயேட்சையாக திருவாங்கூர் – கொச்சி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மலையாள சட்டமன்றத்தில் இனவெறி ஆட்சியாளர் பட்டம் தாணு பிள்ளையின் கொடுங்கோன்மையை எதிர்த்து முழங்கியவர். தனது வலிமையான புரட்சியுரைகளால் தமிழ் இளையோருக்கு இனவிடுதலை உணர்வூட்டியவர்.
மார்ஷல் நேசமணி போன்ற முதன்மை தலைவர்கள் சிறைப்பட்ட காலத்தில் தமிழர் விடுதலை போராட்டத்தின் முன்னணியில் நின்று தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தவர். திருவாங்கூர் போராட்டத்தின் மிகமுக்கிய நாளான 1954 ஆகஸ்ட் 11 தமிழர் விடுதலை நாள் ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்தியவர். அன்றைய தினம் நடைபெற்ற காவல்துறை அடக்குமுறைகளுக்கும் தடியடிகளுக்கும் பணியாமல் ரத்தம் சொட்ட போராடியவர். தெற்கெல்லை போராட்டத்தின் கட்டளை தளபதி ஐயா குஞ்சன் நாடார் நினைவை போற்றுவோம் என அவர் தெரிவித்தார்.



