ஈரோடு, ஜூலை 3 –
தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை திட்டத்தின்படி பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு மேட்டுக்கடையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு. முத்துசாமி தலைமை தாங்கி பேசினார். இதில் மாவட்ட மத்திய, வடக்கு செயலாளர்கள் நல்ல சிவம், தோப்பு வெங்கடாசலம், ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ, தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் பிறகு அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் உரிமையை மீட்க எடுக்கும் முன்னெடுப்பாக ஓரணியில் தமிழ் நாடு திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்து உள்ளார். இதில் பொதுமக்களை தி.மு.க.வினர் நேரடியாக சந்திக்க உள்ளனர். அப்போது பொதுமக்களிடம் 6 கேள்விகள் கேட்கப்படும். அவர்கள் அளிக்கும் பதிலை குறித்து கொள்வார்கள். மேலும், பொதுமக்களை சந்தித்தோம் என்பதற்கு ஒரு ஸ்டிக்கர் வழங்கப்படும். வீட்டின் உரிமையாளர் அனுமதியோடு அந்த ஸ்டிக்கர் கதவில் ஒட்டப்படும்.
மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதை மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பது நமது கடமையாகும். இதில் இளைஞர்கள் பலர் பங்கேற்கின்றனர். 3-ந் தேதியில் இருந்து பூத் வாரியாக பொதுமக்களை முகவர்கள் நேரடியாக சந்திக்கின்றனர். இதில் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கை களும் தனியாக சேகரிக்கப்படும். இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சாதி, மதம், கட்சி. பாகுபாடு இல்லாமல் தமிழ் நாட்டை பாதுகாக்கும் உணர்வுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் கட்சி உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



