தஞ்சாவூர், ஆகஸ்ட் 4 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 440 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தை சேர்ந்த திருப்பாலத்துறை கிராமத்தில் பாலமுருகன் என்பவர் குடமுருட்டி ஆற்றில் மூழ்கி உயிரிந்ததற்கு அவரின் குடும்ப உறுப்பினர்களிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதி ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் மணிமாறன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.