மார்த்தாண்டம், ஜுலை 9 –
மார்த்தாண்டம் – கருங்கல் சாலையில் அமைந்துள்ள விரிகோடு ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் திடீரென அதிகாரிகள் மாற்று வழி பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் விரிகோடு சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி மாலிக் முகமது ஆகியோருடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் நிலவரங்கள் குறித்து விவாதித்தனர். பின்னர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பேச்சு வார்த்தைகளின் முடிவின்படி புதிய வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வது எனவும், விரிகோடு ரயில்வே கிராசிங் வழியாக மேம்பாலம் அமைக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பல வருட காலமாக நடைபெறும் பொதுமக்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என தெரிகிறது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர். பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்னகுமார், மேல்புறம் வட்டாரத் தலைவர் ரவிசங்கர், மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா ரவிசங்கர், உண்ணாமலைக் கடை பேரூராட்சி தலைவர் பமலா, மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாஜன் கிறிஸ்டா மற்றும் போராட்ட குழு தலைவர் ஸ்டான்லி உட்பட ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



